/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கால்பந்து விளையாடும் ' ரோபோ ' வை கண்டுபிடித்த மாணவர்கள்
/
கால்பந்து விளையாடும் ' ரோபோ ' வை கண்டுபிடித்த மாணவர்கள்
கால்பந்து விளையாடும் ' ரோபோ ' வை கண்டுபிடித்த மாணவர்கள்
கால்பந்து விளையாடும் ' ரோபோ ' வை கண்டுபிடித்த மாணவர்கள்
ADDED : ஏப் 26, 2026 12:47 AM

இந்தியாவின் எதிர்காலமாக அறியப்படும் மாணவர்கள், விஞ்ஞான உலகில் பல வேலைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில், பெலகாவியை சேர்ந்த இரு மாணவர்கள் கால்பந்து விளையாடும் திறனுடைய ரோபோவை கண்டறிந்து உள்ளனர்.
பெலகாவி நாகனுாரில் உள்ள ஸ்ரீ சித்தராமேஸ்வர கல்வி நிறுவனத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுஷாந்த், வித்தலா மல்லிகார்ஜுனா.
இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் ரோபோ கண்டறிவதில் அதிக ஆர்வம் இருந்தது.
இதை அறிந்த ஆசிரியர்கள், இருவருக்கும் பிரத்யேக பயிற்சி அளித்தனர். இதற்காக அவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை.
இதை மாணவர்கள் இருவரும் அருமையாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் இணையத்திலும் ரோபோ செய்வது குறித்து அறிந்து கொண்டனர்.
அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.இவர்கள் கால்பந்து விளையாடும் சிறிய அளவிலான ரோபோவை வெறும் ஆறு நாட்களில் தயாரித்தனர். இது, அவர்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கே அதிர்ச்சியை அளித்தது.
இவர்கள் கடந்த, 4ம் தேதி பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான ரோபோ போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில், 12 மாநிலங்களில் இருந்து 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் ரோபோக்களுடன் பங்கேற்றனர். அதில், சீனியர் பிரிவில் நடந்த போட்டியில், சுஷாந்த், வித்தலா மல்லிகார்ஜுனா முதலிடம் பிடித்து அசத்தினர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
ரோபோ போட்டியில், ஹைதராபாத், ஆமதாபாத், கோவா உட்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாங்கள் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தோம்.
இது, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவிலான ரோபோ போட்டியில் பங்கேற்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்க உள்ளோம். முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்: -

