எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் மாணவர்களுக்கு பாராட்டு: எம்.எல்.ஏ., பங்கேற்பு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் மாணவர்களுக்கு பாராட்டு: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 11, 2026 02:38 AM

தங்கவயல்: தங்கவயல் தொகுதியில் எஸ்.எஸ். எல்.சி., தேர்வில், 90 சதவீதம் மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று பாராட்டு விழா நடத்தினார்.
ராபர்ட்சன்பேட்டை நகராட்சி திடலில் பாராட்டு விழா நேற்று நடந்தது. அரசு பள்ளிகள், அரசு உறைவிடப் பள்ளிகள், அரசின் மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்த மொத்தம், 206 மாணவர்கள் 90 சதவீதம் மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டி வாழ்த்தி நி னைவு பரிசுகள் வழங்கினர்.
விழாவில் ரூபகலா பேசியதாவது:
உலக அன்னையர் தினம் என்பதால், மாணவர்கள் வெற்றி பெற பாடுபட்ட அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
முந்தைய கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இல்லை. நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்கள் பலரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.
நடப்பாண்டு தேர்வின் முடிவுகள் சிறப்பாக உயர்ந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழி நடத்தி உருவாக்கிய ஆசிரியர்களுக்கும், அனைத்து விதங்களிலும் ஆதரவு வழங்கிய பெற்றோருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த சிறந்த தேர்வின் முடிவுகள் தங்கவயலுக்கு நற்பெயரை பெற்றுத் தந்துள்ளது. வருங்காலங்களிலும் ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாணவரிடமும் தனித்திறன் மற்றும் ஆற்றல் உள்ளது. அதை சரியான நேரத்தில் வெளி கொண்டு வர வேண்டும்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் பங்கு அளவிட முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது.
எஸ்.எஸ்.எல்.சி.,யில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்து ஒளிமயமான எதிர்காலம் பெற இதயம் கனிந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
