காரை வெடிக்க வைத்து தற்கொலை : வாலிபர் மீது வழக்கு
காரை வெடிக்க வைத்து தற்கொலை : வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2026 10:59 PM

துமகூரு: காதலியை கத்தியால் குத்தி கொல்ல முயன்று, காரை வெடிக்க வைத்து தற்கொலை செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
உத்தர கன்னடாவின் அங்கோலா அகசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா, 30. இவரது காதலி ரம்யா, 23. நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து அங்கோலாவுக்கு வாடகை காரில் சென்றனர். துமகூரு அருகே கல்லம்பெல்லா கிராமத்திற்கு சென்ற போது, காதல் ஜோடி இடையே சண்டை ஏற்பட்டது.
காதலியை, காதலன் கத்தியால் குத்தினார். காரை நிறுத்திய டிரைவர் பிரவீன், ரம்யாவை மீட்டார். காருக்குள் இருந்த நாகேந்திரா, வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டார். கத்திக்குத்தில் காயம் அடைந்த ரம்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் கல்லம்பெல்லா போலீசார் விசாரித்தனர்.
நாகேந்திராவை ஆறு ஆண்டுகளாக காதலித்ததாகவும், நான்கு ஆண்டுகளாக அவர் 'சைக்கோ' போல நடந்ததாகவும், மூன்று நாட்களுக்கு முன், தான் தங்கியிருந்த பி.ஜி.,க்கு வந்து, 'என்னை திருமணம் செய்யாவிட்டால், வெடிகுண்டை வெடிக்க வைத்து கொன்று விடுவேன்' என மிரட்டியதாகவும் போலீசிடம், ரம்யா கூறினார்.
அந்த புகாரின்படி, நாகேந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய வெடிகுண்டு, எல்லாபுரா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
பெட்ரோல் வெடிகுண்டா அல்லது நாட்டு வெடிகுண்டா என்பது தடய ஆய்வ அறிக்கைக்கு பிறகே தெரியவரும். நாகேந்திராவின் நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது.
