ADDED : ஆக 12, 2025 05:51 AM
பெங்களூரு : சட்டசபையில் ஆறு மாதங்கள் வரை 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெறும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அர சு பணிகள் வழங்கும் டெண்டரில், முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 21ல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, காகிதங்களை கிழித்து சபாநாயகர் காதர் மீது சில எம்.எல்.ஏ.,க்கள் வீசினர்.
இதனால் , ஆவேசமடைந்த சபாநாயகர், பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், கடந்த ஏப்ரலில் சபாநாயகரை சந்தித்து, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பிப் பெறும்படி வேண்டினர். இதையடுத்து, மனம் மாறிய சபாநாயகர், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவதற்கு, மே 25ல் முடிவு செய்தார்.
இந்த தீர்மானத்தை, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, சபாநாயகர் வாய்மொழி ஓட்டெடுப்பு நடத்தினார்.
அனைவரும் ஆதரிப்பதாக கூறியதால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
