/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
'ஸ்டெம் செல்'கள் தானம் செய்த சுவாதி
/
'ஸ்டெம் செல்'கள் தானம் செய்த சுவாதி
ADDED : மார் 16, 2026 06:54 AM

- நமது நிருபர் -
புற்றுநோய் மற்றும் ரத்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரை காக்க, ஆரோக்கியமான நபர்களிடம் இருந்து, ரத்த ஸ்டெம் செல்கள் தானமாக பெறப்படுகின்றன. இந்த தானத்தின் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இந்நிலையில் 19 வயது கல்லுாரி மாணவனுக்கு, 32 வயது இளம்பெண் ஒருவர் ரத்த ஸ்டெம் செல்களை தானமாக கொடுத்து புத்துயிர் அளித்து உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் ஆனந்த், 19. தனியார் கல்லுாரியில் படிக்கும் இவர் அப்லாஸ்டிக் அனீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயை குணப்படுத்த ரத்த ஸ்டெம் செல்கள் தேவைப்பட்டது. உத்தர கன்னடாவின் குமட்டாவை சேர்ந்தவரும், ஐ.டி., ஊழியருமான சுவாதி, 32 ரத்த ஸ்டெம் செல்களை தானமாக கொடுத்தார். இதன்மூலம் ஆனந்த் தற்போது உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் உள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் கூறியதாவது:
கடந்த 2022ம் ஆண்டு, எனக்கு 15 வயது இருந்த போது, அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது. உடல் பரிசோதனை செய்த போது, அப்லாஸ்டிக் அனீமியா எனும் எலும்பு மஜ்ஜையில் போதுமான புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய தவறும் அரிய வகை நோய் இருப்பது தெரிந்தது.
இந்த நோயை தீர்க்க ஒரே வழி, ஆரோக்கியமானவர் ரத்த ஸ்டெம் செல்களை தானமாக பெறுவது தான் என்று தெரிந்தது. ஒரு அமைப்பின் மூலம் சுவாதியிடம் இருந்து ரத்த ஸ்டெம் செல்கள் தானமாக கிடைத்தது. இப்போது நல்ல நிலையில் இருப்பதாக உணருகிறேன். சில போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். வீடியோகிராபி, புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவாதி கூறியதாவது:
ரத்த ஸ்டெம் செல்களை தானமாக கொடுத்து, ஆனந்த் உயிரை காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது தாய் என்னென்ன வலிகளை சந்திக்கிறார் என்று எனக்கு நன்கு தெரியும்.
எனது மகனை உயிர் கொடுத்து வரவேற்றது போல, ஆனந்திற்கும் உயிர் கொடுத்ததை சொல்ல வார்த்தைகள் இல்லை.
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 முதல் 55 வயதுடைய நபர்கள், ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்யலாம். இதுபற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததால், தானம் செய்ய பலர் அஞ்சுகின்றனர். மற்றவர்கள் உயிரை காப்பாற்ற தானம் செய்வது தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

