/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
சமத்துவத்துக்காக விருந்து கொடுக்கும் மூதாட்டி
/
சமத்துவத்துக்காக விருந்து கொடுக்கும் மூதாட்டி
ADDED : மார் 16, 2026 06:54 AM

- நமது நிருபர் -
மதங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் பலர் உள்ள நிலையில், சமத்துவத்தை உருவாக்கவும் சிலர் இருப்பது, ஆறுதலான விஷயமாகும். இவர்களில் மீனாட்சி சீனிவாசனும் ஒருவர். இவர் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு, ரம்ஜான் நேரத்தில் விருந்து ஏற்பாடு செய்கிறார்.
தமிழகத்தை சேர்ந்தவர் மீனாட்சி சீனிவாசன், 80. இவர், பெங்களூரில் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் நடந்த மத கலவரங்கள், இவரது மனதுக்கு வருத்தம் அளித்தது.
மனிதர்கள் இடையே ஜாதி, மதம் புகுந்து பிரிவினையை ஏற்படுத்த கூடாது என்பது, இவரது குறிக்கோள். இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என, விரும்பினார்.
ரம்ஜான், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு, புனிதமான பண்டிகையாக கருதப்படுகிறது. அந்த நாட்களில் இவர்களுக்காக மீனாட்சி சீனிவாசன் விருந்து ஏற்பாடு செய்கிறார். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி, ஹிந்துக்கள் உட்பட, அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்த விருந்தை அவர் ஏற்பாடு செய்கிறார். இது சமுதாய ஒற்றுமைக்கு, எடுத்துக்காட்டாக உள்ளது.
இது குறித்து, மீனாட்சி சீனிவாசன் கூறியதாவது:
பெங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன், மதக்கலவரம் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை இருந்தது. இது என் மனதுக்கு வருத்தம் அளித்தது. மனிதர்களாக இருக்கும் நாம், எதற்காக சண்டை போட வேண்டும்.கோபத்தை காட்டுவதற்கு பதில், ஒருவரை ஒருவர் நேசிப்பது அவசியம் என்பது, என் கருத்து.
நமது உணவு நடைமுறை, வேறாக இருக்கலாம். ஆனால் மற்றவருக்கு ஆதரவாக இருப்பதை நிறுத்த கூடாது. நோன்பை முடிக்கும் போது, மக்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்த வேண்டும். எனவே ரம்ஜான் நேரத்தில், விருந்து ஏற்பாடு செய்கிறோம். எந்த விஷயத்துக்கும் கோபத்துடன் பதில் அளிப்பதை விட, அன்புடன் பதில் அளிப்பது நல்லது.
விருந்துக்காக ஹோட்டல்களில் இருந்து, உணவு வரவழைக்கப்படுகிறது. எங்களின் நண்பர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர்.
சிலர் ஐஸ்கிரீம், ரசமலாய் உட்பட, பல விதமான உணவுகளை தயாரித்து வழங்குகின்றனர். அனைத்து ஜாதி, மதத்தவரும் விருந்தில் பங்கேற்கின்றனர். இம்முறையும் விருந்து ஏற்பாடு செய்வோம்.
இது சமுதாயங்களுக்கு இடையே, சமத்துவத்தை ஏற்படுத்த எங்களால் முடிந்த, ஒரு சிறிய முயற்சியாகும். அனைத்தையும் விட, மனித நேயம் மிகவும் முக்கியம். எந்த மதத்தவராக இருந்தாலும், முதலில் நாம் மனிதர்கள். ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். இது வேற்றுமையை விலக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

