ADDED : ஜூன் 30, 2026 04:46 AM

- நமது நிருபர் -
மைசூரு நகரில் அமைந்துள்ள ஸ்வேத வராஹ சுவாமி கோவில், பக்தர்களை சுண்டி இழுக்கிறது. இது புராதன பிரசித்தி பெற்றதாகும். மைசூருக்கு வரும் பலரும், இக்கோவிலை தரிசித்து செல்கின்றனர்.
அரசர் குடும்பம் மைசூரு நகரில் பழமையான பல கோவில்கள் உள்ளன. இவற்றில் ஸ்வேத வராஹ சுவாமி கோவிலும் ஒன்றாகும். மைசூரு அரண்மனை வளாகத்தில், பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள இக்கோவில், ஹொய்சாளர் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
உட்புறமும், வெளிப்புறமும் கலை நயத்துடன் தோற்றமளிக்கிறது. கோவிலின் சுவர்களில் ராமாயணம், பகவத் கீதையை விளக்கும் நேர்த்தியான மரச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
இக்கோவில், மைசூரு அரச குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. கோவில் கர்ப்ப கிரஹத்தின் மூலவரான வராஹ சுவாமி விக்ரகம், தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. வெண்மை நிறத்தில் இருப்பதால், ஸ்வேத வராஹ சுவாமி என, அழைக்கப்படுகிறார். 12ம் நுாற்றாண்டில், ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்டது.
அதன்பின் மைசூரு உடையார் கோவிலை சீரமைத்ததாக, வரலாறு கூறுகிறது. கோவிலின் நுழைவாயில், கோபுரங்கள் மீது கலை நுணுக்கங்களுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த காலத்து ஹைடெக் இன்ஜினியர்களுக்கு சவால் விடும் வகையில் அசத்தலாக கட்டப்பட்டுள்ளது. ஜாதகத்தில் உள்ள தோஷங்களால், நீண்டகாலமாக திருமணம் நடக்காமல் இருப்பவர்கள், ஸ்வேத வராஹ சுவாமியை தரிசித்து, சிறப்பு பூஜைகள் செய்தால் அனைத்து தடைகளும் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
12 வாரங்கள் வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களால் அவதிப்படுவோர், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து 12 வாரங்கள் இங்கு வந்து, 12 முறை கோவிலை வலம் வந்தால் கஷ்டங்கள் விலகி, மகிழ்ச்சி பொங்கும். ஸ்வேத வராஹ சுவாமியை தரிசித்தால், மோட்சம் கிடைக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கர்நாடகாவின் பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
