அயலக தமிழர்களுக்கான தமிழ் தேர்வு மாணவ - மாணவியர் உற்சாகம்
அயலக தமிழர்களுக்கான தமிழ் தேர்வு மாணவ - மாணவியர் உற்சாகம்
ADDED : ஏப் 26, 2026 11:54 PM

பெங்களூரு: பெங்களூரு சி.வி.ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., கேந்திரியா வித்யாலயா பள்ளியில், டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம், தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து, அயலக மற்றும் வெளிமாநில தமிழர்களுக்கான 'அகரம்' தமிழ் தேர்வு (நிலை -1) மற்றும் அதனை தொடர்ந்து மேல்நிலைத் தேர்வுகளை நடத்தியது.
முதல் நிலையான 'அகரம்' தேர்வில், தமிழகத்தின் 1ம் முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையான பாடத்திட்ட தேர்வில் 250 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மதியம் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கு இணையான 'இகரம்', 'உகரம்', 'ழகரம்' மற்றும் 'சிகரம்' தேர்வுகளில், 234 மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர்.
இத்தேர்வை, டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கம நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர். தமிழ் ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முழு ஆதரவை வழங்கினர்.
முக்கியமாக, அயலக மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை கற்றுக்கொள்ள காட்டிய உற்சாகம், ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவர்களின் ஈடுபாடு, தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பரவலுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.
டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்திய இந்த முயற்சி, தமிழ் மொழி மீது பற்றும், பெருமையும் வளர்க்கும் ஒரு முக்கிய கல்வி இயக்கமாக திகழ்கிறது.
