ADDED : ஏப் 26, 2026 12:20 AM
காடுகோடி: கோவில் முன் படுத்திருந்த டிரைவரை, கல்லை போட்டு கொலை செய்த மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் ஓசூரை சேர்ந்தவர் ராமசந்திர ரெட்டி, 45; வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். பெங்களூரில் லாரி, ஆட்டோ, சரக்கு வாகனங்களை ஓட்டி வந்தார். இவருக்கு வீடு எதுவும் இல்லை. தினமும் இரவு பணி முடிந்த பின், கிடைத்த இடங்களில் படுத்து உறங்குவார். எப்போதாவது ஓசூருக்கு சென்று வருவார்.
வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின், நள்ளிரவு, 12:30 மணியளவில், காடுகோடியின் பட்டாலம்மன் கோவில் முன் படுத்து உறங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், ஆலோப்ரிக்ஸ் கல்லை அவரது தலையில் போட்டு கொலை செய்து தப்பியோடினர்.
இதைக்கண்ட சிலர், நேற்று காலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காடுகோடி போலீசார் அங்கு வந்து, அவரது உடலை மீட்டனர். கொலைக்கு முன்பகை அல்லது கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளியை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். ஓசூருக்கு சென்று விசாரணை நடத்தவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
