ADDED : ஜூன் 06, 2026 04:01 AM

பெங்களூரு: கர்நாடக மின்சார கழக நிறுவன நிர்வாக இயக்குனராக, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டு இருப்பதால், முதல்வர் சிவகுமார் மீது, அமைச்சர் ஜார்ஜ் அதிருப்தி அடைந்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யவும் அவர் முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகுமார் அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பவர் ஜார்ஜ். சித்தராமையா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்த ஜார்ஜிடம், மின்சார துறை தான் இருந்தது.
கடந்த, 3ம் தேதி சிவகுமார் பதவியேற்ற சில மணி நேரத்தில், கர்நாடக நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்., ராஜேந்திர சோழன், கர்நாடக மின்சார கழக நிறுவன நிர்வாக இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டு இருந்தது.
இந்த நியமனம், ஜார்ஜ் கவனத்திற்கு வராமலேயே நடந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிர்வாக இயக்குனராக இருந்த, மூத்த அதிகாரி கவுரவ் குப்தா விடுவிக்கப்பட்டதால், அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார்.
நேற்று காலை சித்தராமையாவிடம் மொபைல் போனில் பேசிய ஜார்ஜ், ''சிவகுமார் அமைச்சரவையில் என்னால் அமைச்சராக இருக்க முடியாது; எனது துறையில் எனக்கு தெரியாமல் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர்,'' என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
''ராகுல் இன்று பெங்களூரு வருகிறார். அவரை வரவேற்க நான் விமான நிலையம் செல்கிறேன். நீங்களும் வாருங்கள்; எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம்,'' என, அப்போது ஜார்ஜிடம், சித்தராமையா கூறியுள்ளார்.
விமான நிலைய காத்திருப்போர் அறையில், சித்தராமையா, ஜார்ஜ், துணை முதல்வர் பரமேஸ்வர், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஜார்ஜ், சிவகுமார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், அவரை சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராமலிங்கரெட்டி, முனியப்பா வரிசையில் ஜார்ஜும் சேர்ந்துள்ளது சிவகுமாருக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
