டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கன்னடம் படிப்பது கட்டாயம்
டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கன்னடம் படிப்பது கட்டாயம்
ADDED : மே 06, 2026 11:53 PM
பெங்களூரு: 'கர்நாடகாவில் டாக்சி, ஆட்டோ ஓட்டும் அண்டைய மாநிலத்தை சேர்ந்தவர்கள், கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்,' என்று போக்குவரத்து துறைக்கு, கன்னட மேம்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
'மினி இந்தியா'வான பெங்களூருக்கு, நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை தேடி வருகின்றனர். அவ்வாறு வரும் பெரும்பாலானோர், ஆட்டோ அல்லது டாக்சி ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர்.
தகராறு கன்னட மொழி தெரிந்தவர்கள் ஆட்டோ, டாக்சியில் ஏறும்போது, வேறு மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர்கள் ஹிந்தி மொழியில் பேசுகின்றனர். அப்போது பயணிக்கும், ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. சிலர், 'ஹிந்தி' தான் தேசிய மொழி. ஹிந்தியில் தான் பேசுவேன் என்றும் கூறுகின்றனர்.
'மஹாராஷ்டிரா மாநிலத்தில், டாக்சி, ஆட்டோ ஓட்டுபவர்கள், கண்டிப்பாக மராத்தியில் தான் பேச வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு லைசென்ஸ், வழங்க வேண்டும்' என்று அரசு கட்டாயமாக்கி உள்ளது.
இதுபோன்று, கர்நாடகாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கன்னட அமைப்பினர் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து துறைக்கு, கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே எழுதியுள்ள கடிதம்:
கர்நாடகாவில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள், இம்மாநிலத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவர்கள் தெளிவாக கன்னடம் பேச வேண்டும். உள்ளூர் மக்களுடன் நிதானத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று விதிகள் உள்ளன.
ஆனால் இவை போதுமான அளவு நடைமுறைப்படுத்தவில்லை. பொது சேவை துறையில் பணியாற்றுபவர்களுக்கு, குறைந்தபட்சம் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தவிர்ப்பது எப்படி? சமீப காலங்களில், மொழி பிரச்னையால், கன்னடம் பேச தெரியாத ஓட்டுநர்களுக்கும், கன்னட பயணியருக்கும் இடையே சிறு சிறு பிரச்னைகளுக்கும், பெருமளவில் வாக்குவாதம், மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. இது கவலைக்குரிய விஷயமாகும். ஓட்டுநர்களுக்கு கன்னடம் தெரிந்திருந்தால், இத்தகைய மோதல்களை தவிர்க்கலாம்.
விதிகளை அமல்படுத்துவதுடன், வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, கன்னடம் கற்பிக்க, ஆணையம் தயாராக உள்ளது. ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு முன், ஓட்டுநருக்கு கன்னடம் தெரியுமா என்பதை சோதிக்க, போக்குவரத்து துறை தேர்வு நடத்த வேண்டும்.
கர்நாடகாவின் வாழ்வில் ஓர் அங்கமாகவும், வேலை தேடி வருவோருக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் உள்ள கன்னட மொழியை கற்றுக் கொள்வது, ஓட்டுநர்களின் பொறுப்பு.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
