பெண் பயணியை பலாத்காரம் செய்ய முயன்ற வாடகை கார் ஓட்டுநர் கைது
பெண் பயணியை பலாத்காரம் செய்ய முயன்ற வாடகை கார் ஓட்டுநர் கைது
ADDED : ஜூன் 16, 2026 06:20 AM
பெங்களூரு: வாடகை காரில் பயணித்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரின், அதுாரில் வசிக்கும், 28 வயது பெண், ஜூன் 9ம் தேதி நாராயணபுராவில் உள்ள, தன் தங்கையின் வீட்டுக்கு வந்திருந்தார். மீண்டும் தன் வீட்டுக்கு திரும்ப, வாடகைக்கார், 'புக்' செய்திருந்தார். நள்ளிரவு 1:00 மணியளவில், கே.ஆர்.புரத்தின், டின் பேக்டரி அருகில் காரில் ஏறினார்.
சிறிது துாரம் சென்றதும், செல்ல வேண்டிய பாதைக்கு பதிலாக, ஓட்டுநர் வேறு பாதைக்கு திருப்பினார். இதை கவனித்த பெண், கேள்வி எழுப்பிய போது, அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் என, ஓட்டுநர் கூறினார்.
சந்து சந்தாக சுற்றி வளைத்து சென்றார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும், பெண்ணின் இருப்பிடத்துக்கு செல்லாமல் சுற்றினார். அதுார் கிராஸ் அருகில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், காரை நிறுத்தினார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.
அப்பெண், எதிர்த்து போராடியதுடன், மொபைல் போன் மூலமாக, தன் கணவரை தொடர்பு கொண்டு, காப்பாற்றும்படி அலறினார். 'சிக்கி கொள்வோம்' என்ற பீதியால், பெண்ணை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
அதன்பின் அந்த பெண், ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். கணவரை வரவழைத்து வீடு திரும்பினார்.
பெண்ணின் புகார் குறித்து, விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், பெண் கூறிய அடையாளம், ஓட்டுநரின் மொபைல் எண்ணை வைத்து, கார் ஓட்டுநர் இசுபு, 42, என்பவரை நேற்று கைது செய்தனர்.
பெலகாவியை சேர்ந்த இவர், பெங்களூரில் வாடகைக்கார் ஓட்டுகிறார். சாந்திநகரின், விநாயகா நகரில் வசிக்கிறார். இவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
இரவு, அதிகாலை நேரத்தில் வாடகைக்காரில் பயணிக்கும் பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டும். ஓட்டுநரை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, பயணிப்பது நல்லது. பயணிக்கும் போது பாதையை மாற்றினால், உடனடியாக கவனிக்க வேண்டும்.
பயண நேரத்தில் உறவினர்கள் அல்லது குடும்பத்தினருடன் போனில் தொடர்பில் இருப்பது அவசியம். பயணிக்கும் காரின் பதிவு எண், ஓட்டுநர் பற்றிய விபரங்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
