/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண் எரித்து கொலை டாக்சி ஓட்டுநர் கைது
/
இளம்பெண் எரித்து கொலை டாக்சி ஓட்டுநர் கைது
ADDED : செப் 01, 2025 10:13 PM

பெங்களூரு : திருமணம் செய்யாமலேயே தன்னுடன் வாழ்ந்து வந்த 26 வயது இளம்பெண்ணை, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் அருகில் உள்ள, மளெநல்லசந்திரா கிராமத்தில் வசிப்பவர் விட்டல், 52; வாடகைக் கார் ஓட்டுநர். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தது.
முதல் மனைவி இறந்த பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது மனைவி, வேறொரு நபருடன் ஓடிவிட்டார்.
விட்டலுக்கும் இதே கிராமத்தை சேர்ந்த வனஜாக்ஷிக்கும், 26, பழக்கம் ஏற்பட்டது. வனஜாக்ஷி, கணவரை இழந்தவர். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர்.
திடீரென வனஜாக்ஷி, விட்டலை அலட்சியம் செய்ய துவங்கினார். இதே கிராமத்தை சேர்ந்த வேறு இளைஞருடன் நெருங்கி பழகினார். இதனால் வனஜாக்ஷிக்கும், விட்டலுக்கும் மோதல் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக, இருவருக்கும் சண்டை நடந்தது.
ஆகஸ்ட் 30ம் தேதி, தன் புதிய நண்பருடன் பன்னரகட்டாவில் இருந்து, பசவனபுராவுக்கு காரில் வனஜாக்ஷி சென்று கொண்டிருந்தார். இதை அதே வழியாக தன் காரில் சென்ற விட்டல் கவனித்தார். அவர்களை விரட்டிச் சென்று, ஹொம்மதேவனஹள்ளி அருகில் வழி மறித்தார்.
வனஜாக்ஷி இருந்த கார் மீது, 5 லிட்டர் பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். பீதியடைந்த அவரும், நண்பரும் காரில் இருந்து இறங்கி ஓட துவங்கினர். விரட்டிச் சென்று வனஜாக்ஷியை பிடித்த விட்டல், பெட்ரோலை ஊற்றி, லைட்டரால் தீ வைத்தார். பலத்த காயங்களுடன், தனியார் மருத்துவமனையில் வனஜாக்ஷி சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை வனஜாக்ஷி உயிரிழந்தார்.
ஹுளிமாவு போலீசார், விட்டலை கைது செய்து, விசாரணை நடத்து கின்றனர்.