ADDED : செப் 28, 2025 06:38 AM
சிக்கபல்லாபூர்: நாய் கடித்ததில், ஜாதி வாரி சர்வே எடுக்கச் சென்ற ஆசிரியை காயம் அடைந்தார்.
கர்நாடகாவில் செப்டம்பர் 22ல், ஜாதி வாரி சர்வே துவங்கியது. இந்த பணிக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வே எடுக்க செல்லும் ஆசிரியர்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
அறிமுகம் இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கிடையே நாய்களின் தொல்லையும் துவங்கியுள்ளது.
சிக்கபல்லாபூரின், கோதனஹள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ரஞ்சனி என்பவர், நேற்று மதியம், சிக்கபல்லாபூர் நகரின் திம்மக்கா லே - அவுட்டில் உள்ள, பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி நாராயணசாமி வீட்டில் சர்வே நடத்த சென்றார்.
சர்வே முடிந்து வெளியே வந்தபோது, வீட்டில் இருந்த ஜெர்மன் ஷெப்பர்டு வளர்ப்பு நாய், அவர் மீது பாய்ந்து கடித்தது.
இதில் தொடைப் பகுதியில் காயமடைந்த ரஞ்சனி, உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர் அறிவுறுத்தினார். இச்சம்பவத்துக்கு பின், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
