/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ திருத்த கட்டண அறிக்கை தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்
/
மெட்ரோ திருத்த கட்டண அறிக்கை தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்
மெட்ரோ திருத்த கட்டண அறிக்கை தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்
மெட்ரோ திருத்த கட்டண அறிக்கை தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2025 06:19 AM
பெங்களூரு: ''மெட்ரோ ரயில் டிக்கெட் திருத்த கட்டண அறிக்கையை, மெட்ரோ நிர்வாகம் பொது வெளியில் வெளியிட வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணம், கடந்த பிப்ரவரியில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மெட்ரோ கட்டணம் குறைப்பது குறித்து பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, மெட்ரோ நிர்வாக இயக்குநர் மகேஸ்வர்ராவை சந்தித்து கடிதம் வழங்கினார்.
இதன் பின், அவர் அளித்த பேட்டி:
மெட்ரோ ரயில் கட்டணத்தை சரியான அளவில் நிர்ணயிப்பது குறித்து கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, கடந்த ஆண்டு டிசம்பரில் திருத்தப்பட்ட டிக்கெட் கட்டணம் குறித்த அறிக்கையை மெட்ரோ நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை; அதன் இணையதளத்திலும் பதிவேற்றவில்லை. இது மக்களிடையே நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது.
எனவே, நிர்வாகம் உடனடியாக அந்த அறிக்கையை வெளியிட வேண்டும். இணையத்திலும் பதிவேற்ற வேண்டும். புதுடில்லி, மும்பை, ஹைதராபாதில் உள்ள மெட்ரோ நிர்வாகங்கள் கடந்த காலங்களில் டிக்கெட் திருத்த கட்டண அறிக்கையை மக்கள் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளன.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கும் உதவிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. யானை மிதித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் காங்கிரஸ் அரசு, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு போதுமான நிதி அளிக்கவில்லை.
முஸ்லிம்களின் ஓட்டு வங்கிக்காக செயல்படும் காங்கிரஸ் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இந்த தாக்குதலில் ஹிந்துக்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணையாய் நிற்பது ஹிந்துக்களாகிய நம் கடமை.
இவ்வாறு கூறினார்.