ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டம் முதல்வருக்கு தேஜஸ்வி கடிதம்
ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டம் முதல்வருக்கு தேஜஸ்வி கடிதம்
ADDED : ஆக 13, 2026 12:14 AM

பெங்களூரு: 'பெங்களூரு ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்' என, முதல்வர் சிவகுமாருக்கு, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹெப்பால் குறுகிய சுரங்கப்பாதை திட்டத்துக்கு, 1,140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஹெப்பால் ஏரியின் 3.45 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எக்காரணம் கொண்டும் ஏரி நிலம் கையகப்படுத்தக்கூடாது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கு பல குடியிருப்பு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இருப்பினும், இத்திட்டம் குறித்து இதுவரை மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். விரிவான கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
பெங்களூரின் வளர்ச்சி முக்கியமானதே. அதே சமயம் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகரின் வளர்ச்சி இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிக திட்டங்கள் தேவையில்லை; நிரந்தர திட்டங்களே தேவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
