/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திடீரென சாயும் கட்டடம் வாடகைதாரர்கள் இடமாற்றம்
/
திடீரென சாயும் கட்டடம் வாடகைதாரர்கள் இடமாற்றம்
ADDED : செப் 30, 2025 05:30 AM
நெலமங்களா: மூன்று மாடி கட்டடம் ஒன்று, திடீரென சாய்ந்ததால் வாடகைதாரர்கள் பீதியடைந்துள்ளனர். முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு, அவசர அவசரமாக கட்டடத்தை காலி செய்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, கோரமங்களாவின், வெங்கடாபுராவில் புதிதாக கட்டப்பட்ட ஆறு மாடி கட்டடம், கிரக பிரவேசம் நடக்கும் முன்பே சாய்ந்தது. தற்போது அக்கட்டடத்தை அகற்றும் பணி நடக்கிறது. அதே போன்ற சம்பவம், நெலமங்களாவிலும் நடந்துள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், மாதவராவில் சீனிவாஸ் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று மாடிகள் கொண்ட வீடு கட்டினார். இதை வாடகைக்கு விட்டுள்ளார். ஆறு குடும்பங்கள் வசிக்கின்றன.
நேற்று முன் தினம் இரவு, கட்டடம் திடீரென சாயத் துவங்கியது. பீதியடைந்த வாடகைதாரர்கள் வீட்டை காலி செய்ய முன் வந்தனர். தகவலறிந்து போலீசாரும், மாதநாயகனஹள்ளி நகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்தனர். வாடகைதாரர்களை இடம் மாற்றினர். அசம்பாவிதங்கள் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டட உரிமையாளர் சீனிவாஸ் கூறியதாவது:
நானும் கட்டட ஒப்பந்ததாரர்தான். என் வீட்டை நானே கட்டினேன். மிகவும் வலுவாக பில்லர்கள் போட்டு கட்டப்பட்டது. கடன் வாங்கி 80 லட்சம் ரூபாய் செலவில், வீடு கட்டினேன். ஆனால் இப்போது கட்டடம் சாய்ந்திருப்பதால், எனக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கட்டடத்தில் இருந்த வாடகைதாரர்களுக்கு, எந்த அபாயமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். கட்டடம் சாய்வதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.