பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த பயங்கரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல்
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த பயங்கரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல்
ADDED : மே 20, 2026 10:45 PM
பெங்களூரு: பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில், பயங்கரவாதிக்கு, ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது ஆரீப்; சாப்ட்வேர் இன்ஜினியர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். மனைவி, பிள்ளைகளுடன் தனிசந்திராவில் வசித்தார்.
தடை செய்யப்பட்ட தலிபான் மற்றும் தெஹ்ரீக் - இ - தலிபான் என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கடந்த 2023ம் ஆண்டு முகமது ஆரீப்பை, பெங்களூரு என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், மஹாராஷ்டிராவின் ஹம்ராஸ் வோர்ஷித் ஷேக் என்பவருக்கும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், இருவரும் சேர்ந்து இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவாக மாற மூளைச்சலவை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து, ஹம்ராஸ் வோர்ஷித் ஷேக்கும் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்று, சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததும், என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிந்தது.
அவர்கள் இருவர் மீதும் பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 2019 முதல், 2022 வரை சவுதி அரேபியாவில் வசித்த ஹம்ராசுக்கு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டினர் சிலருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, பயங்கரவாத அமைப்புகளின் சித்தாந்தத்தால் அவர் ஈர்க்கப்பட்டார்.
இந்தியா திரும்பிய பின், நண்பர் முகமது ஆரீப்புடன் சேர்ந்து, 'காஷ்மீர் பேஜ்' என்ற பெயரில், சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கி, அதில் வீடியோக்களை பதிவிட்டு, இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், ஹம்ராசுக்கு, 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 63,000 ரூபாய் அபராதம் விதித்து, என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
அவரின் கூட்டாளி, முகமது ஆரீப்புக்கும் விரைவில் தண்டனை கிடைக்க உள்ளது.
