குழியில் வாலிபர்கள் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிப்பு
குழியில் வாலிபர்கள் உடல் கருகிய நிலையில் கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 14, 2026 06:04 AM
கொப்பால்: கொப்பாலில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழியில், எரிந்த நிலையில், இரு இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்டதால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.
கொப்பால் மாவட்டம் காகனுார் தாலுகாவின் மாசபா ஹன்சினாலா கிராமத்தை சேர்ந்தவர்கள் ருத்ரேஷ் கங்காவதி, 23, ரவி ராமண்ணா தட்டி, 32. இருவரும் கிராமத்தில் உள்ள கோழி பண்ணையில் வாகன ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தனர்.
நான்கு நாட்களுக்கு முன் இருவரும் பணிக்கு சென்றவர்கள், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று காலையில் அதே கிராமத்தின் புறப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் குழியில், எரிந்த நிலையில் இரு உடல்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் ஆய்வு செய்ததில், காணாமல் போன ருத்ரேஷ் கங்காவதி, ரவி ராமண்ணா தட்டி என்பதை உறுதி செய்தனர்.
இறந்தவர்களின் உடல் அருகில் மதுபான பாக்கெட்களும், அறுந்த செருப்புகளும் இருந்தன. ஆனால், அவர்கள் பயணித்த இரு சக்கர வாகனம் வேறொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
