ADDED : அக் 09, 2025 10:56 PM

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதாக, அரசு பெருமை பேசுகிறது. ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில், அக்கறை காட்டுவதில்லை. இதற்கு சிரகுப்பா விளையாட்டு அரங்கம், சிறந்த உதாரணம்.
பல்லாரி மாவட்டம், சிரகுப்பா தாலுவாவில் விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த அரங்கம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால், சரியாக பராமரிப்பது இல்லை. தற்போது சீர்குலைந்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடுகள், தலைவர்களின் ஆலோசனை கூட்டங்கள், சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் இந்த விளையாட்டு அரங்கில் நடக்கின்றன. இத்தகைய விழாக்கள், மாநாடுகள் நடக்கும்போது மட்டும், அரங்கை சுத்தம் செய்கின்றனர். பள்ளங்கள் உள்ள இடத்தில் மண்ணை கொட்டி, சமன்படுத்தி அழகாக்குகின்றனர். மற்ற நாட்களில் குப்பையை போட்டு விடுகின்றனர்.
அதுபோன்ற வேளைகளில் மாடுகள், தெரு நாய்களின் புகலிடமாக உள்ளது.
ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழை பெய்தால், சேறும், சகதியாக மாறுகிறது. ரன்னிங் டிராக் இல்லை. இங்கு விளையாட்டு பயிற்சிக்கு வருவோருக்கு கழிப்பறையும் இல்லை. விளையாட்டு அரங்கம் குண்டும், குழியுமாக இருப்பதால், பயிற்சியின்போது பலரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். விளையாட்டு அரங்கில் மின் விளக்குகள் இல்லை.
இரவு நேர போட்டிகள் நடத்த, எந்த வசதிகளும் இல்லை. அரங்கின் பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்கவில்லை. இதனால் மாலை நேரத்தில் விளையாட்டு அரங்கம், சமூக விரோதிகள் புகலிடமாக உள்ளது.
மது அருந்துவது, சீட்டாடுவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட முறைகேடான செயல்கள் நடக்கின்றன. இரவு நேரத்தில் வாக்கிங் செய்வோர், பயந்தபடியே செல்ல வேண்டியுள்ளது. பல்லாரி மாவட்டத்தின் பெரிய நகர் என, பெருமை பெற்றுள்ள சிரகுப்பாவில் தரமான விளையாட்டு அரங்கம் இல்லை என, விளையாட்டு வீரர்கள் வருந்துகின்றனர்.
உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுவது உட்பட, பல்வேறு விளையாட்டுகளுக்கு அமைக்கப்பட்ட கோர்ட்களும், சரியான நிர்வகிப்பு இல்லாமல் பாழாகியுள்ளன. விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சிரகுப்பாவில் ஓட்டம், கபடி, டென்னிஸ், கிரிக்கெட், கோ -- கோ, உயரம் தாண்டுதல் உட்பட, பல்வேறு விளையாட்டு திறன் கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் பயிற்சி பெற, சரியான வசதிகள் இல்லை. உடனடியாக விளையாட்டு அரங்கை சரி செய்யும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவாகிறது என, விளையாட்டுத் துறை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- நமது நிருபர் -