ADDED : மே 06, 2026 11:48 PM
விஜயபுரா: வீட்டு முன் விளையாடிய சிறுவனை, தெரு நாய் கடித்ததுடன் அவரை 100 அடி துாரம் இழுத்து சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயபுரா நகரின் ராஜ்குமார் லே - அவுட்டில் வசிப்பவர் சந்தோஷ் பிராதார். இவரது மூன்று வயது மகன் விராஜ். இவர் நேற்று முன் தினம் மாலை, வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள், சிறுவன் மீது பாய்ந்து அவரை கடித்தன. இதில் ஒரு நாய், சிறுவனை 100 அடி துாரம் இழுத்து சென்றது.
இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், நாயை விரட்டி சிறுவனை காப்பாற்றினர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியினரால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது என்றாலும், உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பகுதியில் தெரு நாய்கள் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இது குறித்து மாநகராட்சியிடம், பல முறை புகார் அளித்தும் பயன் இல்லை.
சிறுவனை தெரு நாய் இழுத்து சென்றதை அறிந்த, விஜயபுரா மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து, பார்வையிட்டனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
