கண்ணுக்கு எட்டிய துாரத்தில் கனவு பெங்களூரில் இருந்து ஓசூருக்கு மெட்ரோ ரயில் வருமா?
கண்ணுக்கு எட்டிய துாரத்தில் கனவு பெங்களூரில் இருந்து ஓசூருக்கு மெட்ரோ ரயில் வருமா?
ADDED : மே 14, 2026 12:13 AM

- நமது நிருபர் -
பெங்களூரு நகரை தமிழகத்தின் ஓசூர் நகருடன் மெட்ரோ ரயில் வழித்தடத்தால் இணைக்க வேண்டுமென்ற, பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. பொம்மசந்திராவில் இருந்து அத்திபள்ளி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக, மெட்ரோ ரயில் மாறி வருகிறது. மக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிய வழித்தடங்கள் அமைப்பதில், மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசு பணியாற்றி வருகிறது.
அந்த வகையில், அடுத்தடுத்து மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது. புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்ஜாபூர் - ஹெப்பால் இடையே அமைக்கப்படும், '3 ஏ' என்ற சிவப்பு நிற வழித்தடத்துடன், கடபகெரே - தாவரகெரே இடையே, 6.6 கி.மீ.,க்கு புதிதாக வழித்தடம் அமைக்க அரசு ஒப்பு தல் அளித்தது.
இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தை கர்நாடக - தமிழக எல்லையில் இருக்கும் அத்திபள்ளி வரை நீட்டிக்கும் ஆய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 11 கி.மீ., துாரத்தில் அமையவுள்ள இந்த வழித்தடத்தில் நாராயணா ஹெல்த் சிட்டி, சந்தாபுரா, இக்கலுார், திருமகொண்டனஹள்ளி, நெரலுார், அத்திபள்ளி ஆகிய ஆறு ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தமிழகத்தின் ஓசூருடன் பெங்களூரின், மெட்ரோ ரயில் வழித்தடத்தை இணைப்பதற்கு புதிதாக அமைக்கவுள்ள விரிவாக்கம் முக்கியமானது.
அதே போல, இளஞ்சிவப்பு வழித்தடத்தை காளேன அக்ரஹாராவில் இருந்து, காடுகோடி மரப்பூங்கா வரை நீட்டிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இந்த புதிய வழித்தடத்தை, 73 கி.மீ.,யில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால், நகரின் மிக துாரமான மெட்ரோ வழித்தடமாக இருக்கும்.
இந்த வழித்தடத்தில், 50 ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில், ஆனேக்கல் தாலுகாவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு ஜிகினியில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் புதிதாக இணைப்பு கொடுக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஒப்புதல்கள் நிலுவையில் உள்ளன.
முக்கிய
விபரங்கள்
73 கி.மீ., துார வழித்தடம் 50 ரயில் நிலையங்கள் மேல்மட்ட வழித்தடம்
எலக்ட்ரானி
க்
சிட்டி
குடியிருப்பாளர்களுக்கு
இது ஏன் முக்கியம்
சர்ஜாபூர், ஒயிட்பீல்டு மக்களுக்கு சிறந்த வசதி ஜிகினி, அத்திபள்ளி நோக்கிய மேம்பட்ட இணைப்பு ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது முன்மொழியப்பட்ட கிரிக்கெட் மைதானப் பகுதிக்கு விரைவான அணுக முடியும் 2029-க்குள் கட்டுமானப் பணிகள் துவங்க வாய்ப்பு.
