ADDED : ஜன 20, 2026 06:27 AM
குடகு: மாடு மேய்க்க சென்ற விவசாயியை, புலி தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது பசு, பலியானது.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் நல்லுார் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தாதா சோமய்யா, 60. இவர், நேற்று காலையில் மாடுகளை மேய்ப்பதற்காக, வயலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென புலி அவர் மீது பாய்ந்தது. விவசாயி அலறி கொண்டு, கையில் இருந்த தடியால் புலியை தாக்கிவிட்டு, வேகமாக ஓடியதால் உயிர் பிழைத்தார்.
ஆனால், பசுவை காப்பாற்ற முடியவில்லை. பசுவை புலி அடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பசுவின் உடலை மீட்டனர். புலியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்; கூண்டு வைத்துள்ளனர். புலியின் பிடியில் இருந்து தப்பிய விவசாயி தாதா சோமய்யாவின் பசுவை, சில நாட்களுக்கு முன், புலி கொன்று தின்றது. தற்போது மற்றொரு பசுவையும் கொன்றுள்ளது.
தனக்கு நிவாரணம் வழங்கும்படி, அரசிடம் கோரியுள்ளார்.
