/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளைஞர்களிடம் நாளிதழ் படிக்கும் பழக்கம் வளர வேண்டும்: ரூபகலா
/
இளைஞர்களிடம் நாளிதழ் படிக்கும் பழக்கம் வளர வேண்டும்: ரூபகலா
இளைஞர்களிடம் நாளிதழ் படிக்கும் பழக்கம் வளர வேண்டும்: ரூபகலா
இளைஞர்களிடம் நாளிதழ் படிக்கும் பழக்கம் வளர வேண்டும்: ரூபகலா
ADDED : மே 01, 2025 05:32 AM

தங்கவயல்: ''இளம் தலைமுறையினர், நாளிதழ்கள் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்று தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார்.
தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை, 4வது கிராஸ் பகுதியில் சீரமைக்கப்பட்ட தங்கவயல், 'பிரஸ் பவன்' கட்டடத்தை, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா திறந்து வைத்தார். பின், அங்கு மரக்கன்றுகள் கட்டார்.
தொடர்ந்து, பிரஸ் பவனுக்கான அரங்கம் கட்ட, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதற்கான ஆவணத்தை, பிரஸ் பவன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது: இன்றும் கூட, மூத்த குடிமக்கள் அதிகாலை நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. தற்போதைய இளம் தலைமுறையினர், மொபைல் போன் மட்டுமே எதிர்காலமாக உள்ளதாக நினைக்கின்றனர். இப்பழக்கத்தை விட்டு விட்டு, நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை இளம் தலைமுறையினர் வளர்த்து கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் நாளிதழ்களில் வந்தன. ஆனால், விமர்சனங்கள் வர காரணமானவற்றை உணர்ந்தால், சவால்களை வெல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.
பத்திரிகைகளின் பணி கவுரவமானது. அதிகாலை 4:30 மணி முதல் அவர்களின் பணி துவங்குகிறது. பல நல்ல விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.
பாரம்பரியம், கலாசாரம், அறிவார்ந்த சிந்தனைகள் வளர, நாளிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகையாளர்களின் வீட்டு வசதிக்கு, தனி லே - அவுட் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் கோபிநாத், கர்நாடக மாநில பத்திரிகையாளர் சங்க பொருளாளர் வாசுதேவ ஹொல்லா, மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தங்கவயல் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் துரையரசன், பொதுச் செயலர் மூர்த்தி, பொருளாளர் மலர் சேகர் உட்பட பலர் செய்திருந்தனர்.

