'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
UPDATED : ஜூலை 10, 2026 12:46 AM
ADDED : ஜூலை 10, 2026 12:31 AM

பெங்களூரு: ''கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்,'' என, தினமலர் வாசகரான வைத்தியநாதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பெங்களூ ரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தின் 'கடல் தாமரை' புத்தக பூங்காவுக்கு, ஹலசூரில் வசிக்கும் 'தினமலர்' வாசகரும், ஓய்வுபெற்ற தனியார் பள்ளி தலைமை ஆசிரியருமான வைத்தியநாதன், 94, நேற்று வந்தார்.
ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை, நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். கண்ணதாசனின் அர்த்தமுள்ள ஹிந்துமதம் புத்தகத்தை படித்தார்.
பின், அவர் கூறியதாவது:
இங்கு வந்தது மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. நிறைய புத்தகங்கள் தொகுப்பு உள்ளது அருமை. என்னிடம் உள்ள புத்தகங்களில் சிலவற்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளேன். இன்னும் நிறைய புத்தகங்கள் உள்ளன. அடுத்த முறை வரும் போது எடுத்து வருகிறேன்.
இந்த உலகை நமக்கு எடுத்து காட்டும் கண்ணாடி தான் புத்தகங்கள். அவை நமக்கு கிடைத்த பொக்கிஷம். அதை பார்த்து கொள்வது நாம் ஒவ்வொருவரின் பொறுப்பு. பொக்கிஷத்தை பாதுகாக்கும் பணியை செய்து உள்ளீர்கள். உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
ஒரு ஊரின் நடுவில் மரம் இருப்பது அந்த ஊருக்கே பலன் அளிக்கும். அதுபோன்று நீங்கள் இங்கு துவங்கியுள்ள நுாலகம், இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு நிச்சயம் பலன் தரும்.
இந்த நுாலகம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இதற்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து செல்லும், வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏழு நாட்களும்
பூத்து குலுங்கும்
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
