'சிறார்களை அடித்து பாடம் கற்பிக்கும் அவசியமில்லை'
'சிறார்களை அடித்து பாடம் கற்பிக்கும் அவசியமில்லை'
ADDED : ஜூலை 07, 2026 04:05 AM

பெங்களூரு: 'பள்ளியில் சிறார்களை அடித்து, பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நட்போடு கற்பிக்க வேண்டும்' என கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி, தன் மீதான வழக்குக்கு தடை கோரிய ஆசிரியை மனுவை தள்ளுபடி செய்தது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி யு.கே.ஜி., படிக்கிறார். இவரை ஆசிரியை ஆஷா கிராஸ்தா, அவ்வப்போது அடித்துள்ளார். இதையறிந்த பெற்றோர், தங்கள் மகளை அடிக்க வேண்டாம் என, பல முறை எச்சரித்தனர். அதை பொருட்படுத்தாமல், குச்சியால் சிறுமிக்கு காயம் ஏற்படும்படி அடித்துள்ளார்.
இது குறித்து மங்களூரு நகர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர். தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஆஷா கிராஸ்தா, மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'எந்த ஆசிரியரும் சிறார்களை அடித்து, பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறார்கள் தவறு செய்தாலும், அடிக்கவோ, திட்டவோ கூடாது. கடுமையாக நடந்து கொள்ள கூடாது' என கருத்து தெரிவித்தார்.
வழக்குக்கு தடை கோரிய, ஆசிரியையின் மனுவை தள்ளுபடி செய்தார்.
