எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை: அமைச்சர் குண்டுராவ் கருத்து
எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை: அமைச்சர் குண்டுராவ் கருத்து
ADDED : ஏப் 17, 2026 05:01 AM

பெங்களூரு: ''எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி வேண்டும் என கேட்பதில் தவறில்லை,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கேட்டு, சமீபத்தில் டில்லிக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படியாவது அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என, சீனியர் எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பேட்டி:
எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை. அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வேண்டும். நான் அமைச்சராக இருக்கும் போது அமைச்சரவை மாற்றம் இருந்தது.
துணை முதல்வர் சிவகுமாரின் அறிக்கை குறித்து, நான் பேசுவது சரியாக இருக்காது. அமைச்சராக எம்.எல்.ஏ.,க்கள் முயற்சிப்பதில் தவறில்லை. யார் அமைச்சராக வேண்டும் என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும்.
மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எத்தனை தொகுதிகள் இருந்தால் என்ன, 33 சதவீத இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட வேண்டும்.
தொகுதி மறுவரையறை என்பது வேறு. மகளிர் இடஒதுக்கீட்டில் மத்திய அரசு தாமதமாக செயல்படுகிறது.லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகப்படுத்துவது நியாயமற்றதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
