அதிகாரத்தை விரும்புவோர் சிவகுமாருடன் செல்லுங்கள்
அதிகாரத்தை விரும்புவோர் சிவகுமாருடன் செல்லுங்கள்
ADDED : ஜூன் 04, 2026 11:09 PM

பெங்களூரு: ''அதிகாரத்தை விரும்புவோர் சிவகுமாருடன் செல்லுங்கள்; கட்சியை வலுப்படுத்த நினைப்போர் என்னுடன் வாருங்கள்,'' என, காங்கிரஸ் புதிய தலைவர் ஹரிபிரசாத் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான், மாணவராக இருந்த காலத்தில் இருந்தே, காங்கிரசில் உள்ளேன். ஒருபோதும் அமைச்சர் பதவி மீது ஆசைப்பட்டது இல்லை. அதிகாரத்தை விரும்பும் நபரும் அல்ல.
எனக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து உள்ளனர். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவனா அல்லது உயர் வகுப்பை சேர்ந்தவனா என்பது பொருட்டல்ல.
வரும், 2028 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் நான் தான் என்று, சிலர், 'வாட்ஸாப்'பில் பிரசாரத்தை துவங்கி உள்ளனர். கட்சியை கட்டி எழுப்பும் பொறுப்பு மட்டுமே என் மீது உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும். குஜராத் மாதிரி நமக்கு வேண்டாம்; கர்நாடக மாதிரியை பின்பற்றுவோம்.
கட்சியின் தலைவராக என்னை நியமித்த சோனியா, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி. அதிகாரத்தை விட சித்தாந்தமே பெரியது; பதவியை விட மக்கள் நலனே பெரியது என்ற கொள்கையின் அடிப்படையில் உள்ளேன்.
அதிகாரம், பதவி, அமைச்சராக ஆசைப்படுவோர் சிவகுமாருடன் செல்லுங்கள். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நினைப்போர் என்னுடன் வாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
