ADDED : ஏப் 05, 2026 04:41 AM

சிக்கமகளூரு: மரச்சாமான் கடைக்கு தீ வைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம் நகரின் ஐ.ஜி., சாலையில் உள்ள 'ஏ.ஆர்., மரச்சாமான் கடை'யில் கடந்த மாதம் 29ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், மரச்சாமான்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. லட்சக்கணக்கிலான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து சிக்கமகளூரு போலீசார் விசாரணை நடத்தினர்.
'ஏ.ஆர்., மரச்சாமான் கடைக்கு பக்கத்தில் 'மஹாராஜா மரச்சாமான் கடை' இருக்கிறது. இந்த கடையில் வியாபாரம் மந்தமாக இருந்தது. அதே சமயம், ஏ.ஆர்., கடையில் வியாபாரம் நன்றாக இருந்தது. இதனால், மஹாராஜா கடையின் உரிமையாளர் ஹாரிஸே, ஏ.ஆர்., கடையில் தீ வைக்க சதித்திட்டம் தீட்டினார். தீ வைப்பதற்காக சாத், யாகூப் ஆகியோருக்கு 20,000 ரூபாய் கொடுத்தார். இச்சம்பவத்தின் பின்னணியில் பொறாமை, வெறுப்பே இருக்கிறது,' என விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து, மஹாராஜா கடையின் உரிமையாளர் ஹாரிஸ், தீ வைத்த இருவர் ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

