வனப்பகுதியில் மது அருந்திய மூவர் மண்டல வன அலுவலர் 'சஸ்பெண்ட்'
வனப்பகுதியில் மது அருந்திய மூவர் மண்டல வன அலுவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 08, 2026 11:19 PM

சாம்ராஜ் நகர்: பண்டிப்பூர் வனப்பகுதியில் மூன்று பேர் மது அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, மண்டல வன அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், மத்துார் மண்டலத்தில் வேட்டை தடுப்பு முகாம் உள்ளது. இந்த முகாம் முன், குண்டுலுபேட் தாலுகாவின் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த மகாதேவ பிரசாத், 38, கங்காதர் நாகேகவுடா, 50, கக்கலா கிராமத்தை சேர்ந்த சேத்தன் நஞ்சப்பா, 33, ஆகியோர் மது அருந்தினர்.
இந்த புகைப்படத்தை, தங்களின் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இவர் மது அருந்தும் இடத்தில் இருந்து சிறிது துாரத்தில் தான் புலிகள் வனப்பகுதி உள்ளது.
இவர்கள் மது அருந்த யார் அனுமதி கொடுத்தது. வனப்பகுதிக்குள் எப்படி மதுபானங்களை கொண்டு சென்றனர். வேட்டைக்காரர்கள் தடுப்பு முகாமுக்குள் தனி நபர்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், இவர்கள் மூவரும் எப்படி உளளே சென்றனர் என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்புகைப்பட தகவல்களின் அடிப்படையில், மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, கடமையில் இருந்து தவறிய குற்றச்சாட்டில், மண்டல வன அலுவலர் புனித் குமாரை சஸ்பெண்ட் செய்ததுடன், அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.
