/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலி தாக்கி விவசாயி பலி அமைச்சரை சிறைபிடித்த கிராம மக்களால் பரபரப்பு
/
புலி தாக்கி விவசாயி பலி அமைச்சரை சிறைபிடித்த கிராம மக்களால் பரபரப்பு
புலி தாக்கி விவசாயி பலி அமைச்சரை சிறைபிடித்த கிராம மக்களால் பரபரப்பு
புலி தாக்கி விவசாயி பலி அமைச்சரை சிறைபிடித்த கிராம மக்களால் பரபரப்பு
ADDED : அக் 28, 2025 04:22 AM

மைசூரு: புலி தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு அஞ்சலி செலுத்த வந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேயை, கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.
மைசூரு மாவட்டம், சரகூர் தாலுகாவின் பென்னெரே கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர், 58. இவர், நேற்று முன்தினம் தன் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
மைசூரின் கே.ஆர்., மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, நேற்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, அதிகாரிகளுடன் வந்தார்.
அப்போது, ராஜசேகரின் கிராம மக்கள், அமைச்சரை முற்றுகையிட்டு, கேள்விகள் கேட்டனர். 'புலி தாக்கிய பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்; புலியை பிடிக்க வேண்டும்; இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்' என, அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
'எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், இங்கிருந்து வெளியே செல்ல முடியாது' என்று மிரட்டும் தொனியில் கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சூழ்நிலையை புரிந்து கொண்ட அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
பின், போலீஸ், வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அமைச்சர் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து, பென்னெரே கிராமத்திற்கு, 'கும்கி' யானைகளான பீமா, மஹேந்திரா ஆகிய இரண்டு யானைகளும் லாரி மூலம் அழைத்து வரப்பட்டன.
'கும்கி யானைகள் மூலம், விவசாயியை கொன்ற புலியை விரைவில் பிடிப்போம்' என, கிராம மக்களிடம் வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

