ADDED : மே 12, 2026 11:25 PM
பாகல்கோட்: வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், பாகல்கோட் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள், வெறிச்சோடி காணப்படுகின்றன. சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததால், வியாபாரிகளும் நஷ்டமடைந்துள்ளனர்.
பாகல்கோட் மாவட்டத்தில் பாதாமி, ஐஹொளே, பட்டதகல்லு, கூடல சங்கமா உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலா தலங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைத்தது. ஹோட்டல், லாட்ஜ், ரிசார்ட்டுகள் நிரம்பி இருந்தன.
ஆனால் இப்போது சூழ்நிலையே மாறியுள்ளது. சுற்றுலா பயணியர் இல்லாமல், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பாகல்கோட் மாவட்டத்தில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தற்போது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவுகிறது. வெப்பத்துக்கு பயந்து சுற்றுலா பயணியர் வருவதில்லை.
பாதாமியின் குகைக்கோவில்கள், ஐஹொளே, பட்டதகல்லுவின் சிற்பங்கள், பசவண்ணரின் ஐக்கிய மண்டபம், சங்கமநாதர் கோவில் என, எந்த இடத்திலும் சுற்றுலா பயணியரை காண முடியவில்லை.
சுற்றுலா பயணியரை நம்பி வாழும் இளநீர், குளிர்பானம், தின்பண்ட வியாபாரிகள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட, பல்வேறு பொருட்களை விற்கும் வியாபாரிகள், ஹோட்டல், தங்கும் விடுதி உரிமையாளர்கள் வருவாய் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.
பாகல்கோட் மட்டுமின்றி, கர்நாடகாவின் பல்வேறு சுற்றுலா தலங்களிலும், இதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
