ADDED : மே 13, 2026 11:50 PM
பெங்களூரு: கர்நாடக வனப்பகுதிகளுக்குள் நுழைய சுற்றுலா பயணியருக்கு, மாநில வனத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் உள்ள நாகமலை மலைக்கோவிலுக்கு, பெங்களூரைச் சேர்ந்த சிறுவன் ஹரிஷித், 10, தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றார்.
அப்போது, அங்கு திடீரென வந்த ஒரு சிறுத்தை, சிறுவனை தாக்கி இழுத்துச் சென்று கொன்றது. கடந்த ஜனவரியில் ஏற்கனவே ஒரு பக்தர், இதுபோன்று சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரில் வனத்துறையின் உயர்மட்டக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின், மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பிறப்பித்துள்ள உத்தரவு:
மாநிலத்தின் பல்வேறு வனப்பகுதிகளில், குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டியுள்ள காடுகளில் சிறுத்தைகள், புலிகளின் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
மனிதர் - விலங்கு மோதல்கள் காரணமாக உயிரிழப்புகள், கால்நடை இழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
சிறுத்தைகள், புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள குறிப்பிட்ட வனப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
காடுகளின் உட்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களைக் கண்காணிக்க வனத்துறையினர் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.
வன எல்லைகளில் உள்ள கிராம மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவை பட்டால் சூரிய மின்சக்தி வேலிகள் அல்லது கண்காணிப்பு கோபுரங்களை அமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் உத்தரவில் கூறியுள்ளார்.
