போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
ADDED : மார் 18, 2026 05:58 AM

தட்சிண கன்னடா: போக்குவரத்து விதிகளை மீறியதற்கு தண்டனையாக, நீதிமன்ற உத்தரவுப்படி, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த வாலிபர், சமூக வலைதளங்களில் தன் படம் வைரலானதால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியாவை சேர்ந்தவர் ரக் ஷித், 29. சில நாட்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பிடித்த போக்குவரத்து போலீசார், அபராதம் விதிக்க முயற்சித்த போது, அவர் மீது ஏற்கனவே பல போக்குவரத்து விதி மீறல்கள் புகார்கள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த சுல்லியா போலீஸ் நிலைய எஸ்.ஐ., சந்தோஷ், ஜே.எம்.எப்.சி., என்ற முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், ரக் ஷித்தின் ஓட்டுநர் உரிமைத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்தது. 3,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், மார்ச் 15 முதல், 29ம் தேதி வரை தினமும் சுல்லாபேட்டின் முக்கிய சந்திப்பில், வாகன விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுபடி, சுல்லியா முக்கிய சந்திப்பில், இரு கையிலும் பதாகையுடன், ரக் ஷித் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்த படம், சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சேவையை முடித்து விட்டு அன்று வீட்டுக்கு சென்று விட்டார்.
மறுநாள் தான் வேலை பார்க்கும், மீன் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு தன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த போது, சமூக வலைதளங்களில் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புகைப்படங்கள் வைரலாகின.
இதனால், வேதனை அடைந்த அவர், விஷம் குடித்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், அவரை சுல்லியால் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.
