ADDED : ஆக 25, 2025 04:16 AM
மைசூரு:போக்குவரத்து விதிமீறல்களுக்கு, அபராதம் செலுத்த 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்ட முதல் நாளான நேற்று முன்தினம், மைசூரில் இருசக்கர வாகன உரிமையாளர், 36,000 ரூபாய் அபராதம் செலுத்தி, தன் மீதான வழக்குகளை முடித்து கொண்டார்.
மைசூரு நகரை சேர்ந்த ஸ்கூட்டி உரிமையாளர், ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதி வேகம், சிக்னல் ஜம்ப் உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறியுள்ளார். அவர் மீது 78 வழக்குகள் பதிவாகியுள்ளன. 72,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது. போக்குவரத்து துறை போலீசார், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.
இதற்கிடையே போக்குவரத்து விதிமுறைகளை பாக்கி வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு, ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அளித்துள்ளது. இதை பயன்படுத்தி, தன் மீதான வழக்குகளை முடித்து கொள்ள, ஸ்கூட்டி உரிமையாளர் விரும்பினார்.
அவர் நேற்று முன்தினம், போக்குவரத்து துறை போலீசாரை சந்தித்தார். மொத்த அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையின்படி, 36,000 ரூபாய் அபராதம் செலுத்தி, தன் மீதான வழக்குகளை முடித்து கொண்டார்.
