ரயில் இருக்கைக்கு சண்டை இருவருக்கு கத்திக்குத்து
ரயில் இருக்கைக்கு சண்டை இருவருக்கு கத்திக்குத்து
ADDED : மே 06, 2026 11:59 PM
மைசூரு: மைசூரில் இருந்து பெங்களூரு வந்த ரயிலில், இருக்கைக்காக நடந்த சண்டையை விலக்க வந்தவரையும், ரயில்வே போலீசையும் கத்தியால் குத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் 'ராஜ்ய ராணி' விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. சுபான் குரேஷி, சொயிப், வாசிம் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் பெங்களூருக்கு பயணம் செய்தனர்.
மாண்டியா மாவட்டம் மத்துார் நெருங்கும்போது, இருக்கையில் அமருவது தொடர்பாக, இவர்களுக்கும், மற்ற பயணியருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது அதே ரயிலில் பயணித்த துமகூரை சேர்ந்த சிவகுமார், 'என் குடும்பத்தினர் இங்கு தான் அமர்ந்துள்ளனர். சத்தம் போடாதீர்கள்' என்று கூறி, சண்டையை விலக்கினார்.
இதனால் கோபம் அடைந்த சுபான் குரேஷி, தன்னிடம் இருந்த கத்தியால், சிவகுமாரை குத்தினார். அவரிடம் கத்தியை பறித்த சொயிப், சிவகுமாரை மீண்டும் குத்தினார். இதை பார்த்து அஞ்சிய சிவகுமார், ரயிலில் அவசரகால செயினை இழுத்து ரயிலை நிறுத்தினார்.
இதை பார்த்து பயந்த மூவரும், அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது ரயில்வே போலீஸ் குமார் தடுக்க முயற்சித்த போது, அவரையும் கத்தியால் குத்தினர்.
இதை பார்த்த மற்ற பயணியர், மூவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின், அவர்களை சரமாரியாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த சிவகுமார், ரயில்வே போலீஸ் குமார் ஆகியோர் மாண்டியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
