ADDED : ஜூன் 15, 2026 10:26 PM
மைசூரு: போலீசாரின் குளறுபடியால், இரு மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழ்நிலை உருவானது.
மைசூரு நகரின் குவெம்பு நகரில், நேற்று முன்தினம் இரவு, இரு மாணவர்கள் பைக்கில், குறுக்கும், நெடுக்குமாக பைக் ஓட்டியதால், அப்பகுதியில் வசிக்கும் நபருக்கு, சந்தேகம் ஏற்பட்டது.
திருடர்களாக இருக்கலாம் என, நினைத்து அவசர எண் 112ல், போலீசாரை தொடர்பு கொண்டு, 'இருவர் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் செல்கின்றனர்' என, தகவல் கூறினார்.
குவெம்பு நகர் போலீசார், ரோந்து வாகன போலீசாருக்கு பைக் நபர்களை பற்றி கூறினர். ரோந்து போலீசாரும், அந்த இடத்துக்கு வந்தனர். போலீசாரை பார்த்த மாணவர்கள், வேகமாக பைக் ஓட்டினர்.
அவர்களை விரட்டி சென்ற போலீசார், ரோந்து வாகனத்தால் பைக் மீது மோதி, கீழே விழ வைத்தனர். இதில் மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பைக்கில் இருந்த இருவரும், கல்லுாரி மாணவர்கள். இரவு மதுபானம் அருந்தியதால், குடிபோதையில் வீட்டுக்கு செல்ல பயந்து, வீதி, வீதியாக பைக்கில் சுற்றியுள்ளனர்.
போலீசாரை பார்த்ததும், தங்களை சோதனையிட்டால் குடித்திருப்பது தெரிந்துவிடும் என்ற பீதியால், வேகமாக பைக் ஓட்டினர். ஆனால், இவர்களை திருடர்கள் என, தவறாக நினைத்த போலீசார், ரோந்து வாகனத்தால் மோதி, மாணவர்களை கீழே தள்ளி, காயமடைய செய்துள்ளனர்.
இந்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து, அறிக்கை அளிக்கும்படி நகர டி.சி.பி., உத்தரவிட்டுள்ளார்.
