ADDED : மார் 05, 2026 05:27 AM

கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் பெலகாவி. இங்கு, அழகான இடங்கள் பல உள்ளன. அதுமட்டுமின்றி பழங்கால கோட்டைகள், போர் சின்னங்கள் ஆகியவை உள்ளன. இங்கு நிம்மதியாக சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. பெங்களூரு போன்ற நகரத்தில், நரக வாழ்க்கையை வாழ்வோர் சிறிய விடுப்பு எடுத்துக்கொண்டு, பெலகாவிக்கு வந்து நிறைய இடங்களை சுற்றிப்பார்த்து புண்பட்ட மனதை ஆற்றிக் கொள்ளலாம்.
அவ்வகையில், பெலகாவியில் அடையாளமாக திகழும் பெலகாவி கோட்டை பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம். இந்த ஏரி கோட்டை பகுதியில் அமைந்துள்ளதால், ஏரிக்கு கோட்டை ஏரி என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இங்கு படகு சவாரி செய்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
காதலி முகம்
ஏரியை சுற்றியுள்ள பசுமையான மரங்களை பார்த்து கொண்டே செல்வது இன்பத்தை கொடுக்கும். மனதில் இருக்கும் துன்பங்கள் நீரில் செல்லும் அலைகள் போல, கடந்து செல்லும். ஏரியில் படகில் பயணம் செய்யும் போது, துாரத்தில் தெரியும் கோட்டையின் அழகு தொலைதுாரத்தில் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் காதலியின் முகத்தை ஞாபகப்படுத்தும். இங்கு பெடலிங் போட், மிஷின் போட் என பல வகை போட்கள் உள்ளன. படகுக்கு ஏற்றாற் போல, டிக்கெட் கட்டணமும் வேறுபடும். குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் .
அழகிய நினைவுகள்
நண்பர்கள், குடும்பத்துடன் தனியாக நேரம் செலவிட விரும்பினால், அதற்கு தனியாக படகு வாடகைக்கு எடுக்க வேண்டும். இதற்கு, நுாற்றுக்கணக்கில் பணம் செலவாகும். அது, உங்கள் பொருளாதார நிலைமையை பொறுத்து. இந்த படகு பயணத்தை மாலையில் செய்வது சிறப்பு. ஏனெனில், சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கலாம்.
வானம் மஞ்சள் நிறத்திலும், தண்ணீர் நீல நிறத்திலும் வண்ணமயமாக காட்சி அளிக்கும் நிகழ்வை 'மிஸ்' பண்ணாமல் படம் பிடித்து கொள்வது சிறப்பு. ஏனெனில், இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் அழகிய நினைவுகள் மனதில் அலை போல வந்து செல்லும்.
இதையெல்லாம் விட படகில் சவாரி செய்யும் போது ஏற்படும் மன அமைதி அபூர்வமானது.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி. படகில் பயணம் செய்யும் போது 'லைப் ஜாக்கெட்' கட்டாயம் அணிய வேண்டும்.
- நமது நிருபர் -

