கம்பாலாவை திணிக்க வேண்டாம் மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்
கம்பாலாவை திணிக்க வேண்டாம் மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்
ADDED : ஜூலை 11, 2026 11:26 PM

மைசூரு: ''மைசூரு தசராவின் போது கம்பாலாவை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பாரம்பரிய மைசூரு தசராவில், கம்பாலாவை வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதுவரை நடந்து வரும் தசராவை கெடுக்க முயற்சிக்க வேண்டும். கம்பாலா என்பது, கடலோர பகுதி மக்களின் கலாசார மேண்மை, நம்பிக்கையின் சின்னமாகும்.
புவியியல் ரீதியாக அப்பகுதிக்கு மட்டுமே பொருத்தமான கொண்டாட்டமாகும். அதை மைசூருக்கு கொண்டு வந்து, அதன் பாரம்பரியம், தெய்விக பின்னணியின் புனிதத்தை கெடுப்பதை ஏற்க முடியாது.
கடலோர பகுதி பசுமையும், நீரும் சங்கமிக்கும் இடம். இத்தகைய இயற்கை சூழலில், கம்பாலாவை காண்பது பாக்கியமான அனுபவமாக உணர்கிறேன். எனவே, மைசூரு, கடலோர பகுதி மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தசராவில் கம்பாலாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. மைசூரு மக்கள் பிரதிநிதிகளே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
