/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாகன திருட்டு: 8 பேர் கும்பல் கைது
/
வாகன திருட்டு: 8 பேர் கும்பல் கைது
ADDED : மார் 08, 2026 05:44 AM

பெலகாவி: வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவின் எல்லை மாவட்டமாக பெலகாவி உள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லை, மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையாகவும் உள்ளது. எல்லை பகுதிகளில் உள்ள இடங்களில் சமீப காலமாக வாகனங்கள் திருட்டு போவது அதிகமானது.
பெலகாவி மாரிஹால் போலீஸ் நிலையத்தில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட மினி லாரி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், பல மாநில திருடர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, தார்வாட் யூசுப் கான், தார்வாட் ஜாகின் உசேன், விஜயபுரா ஆசாத் இப்ராஹிம், தமிழகம் வேலுாரை சேர்ந்த ஷபிக் அகமது உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் என 21 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

