யோகேஷ் கவுடா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: வினய் குல்கர்னி நடுக்கம்
யோகேஷ் கவுடா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: வினய் குல்கர்னி நடுக்கம்
ADDED : ஏப் 09, 2026 02:15 AM

பெங்களூரு: தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் யோகேஷ்கவுடா. இவர், 2016ன் ஜூன் 15ம் தேதி, மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. பல கோணங்களில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட, பலரை கைது செய்தது.
கடந்த 2020ன் நவம்பர் 5ம் தேதி கைதான வினய் குல்கர்னி, ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார். இவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதால், 2021ன் ஆகஸ்ட் 13ல் விடுதலையானார். அவர் தார்வாடுக்கு செல்ல கூடாது என, நிபந்தனை விதித்தது. அதன்படி அவர் தார்வாட் செல்லாமல் இருந்தார். 2023ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போதும், அவருக்காக மனைவி பிரசாரம் செய்தார்.
சாட்சிகளை மிரட்டுவது, பணத்தாசை காட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டதால், அவரது ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி உத்தரவிட்டது. 2025ன் ஜூன் 13 முதல், வினய் குல்கர்னி சிறையில் இருந்து வருகிறார்.
யோகே ஷ்கவுடா கொலை வழக்கு தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நடப்பாண்டு மார்ச் இறுதி வாரம், வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வக்கீல்களுக்கு, கூடுதலாக எழுத்து மூலமாக வாதிட வாய்ப்பளித்தது. அதன்படி ஏப்ரல் 2ம் தேதி, அனைவரும் எழுத்து பூர்வமாக வாதம் சமர்ப்பித்தனர் .
இதனை அலசி ஆராய்ந்த நீதிமன்றம், ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.
இதன்படி இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. வினய் குல்கர்னி உட்பட 21 பேர் நடுக்கத்தில் உள்ளனர்.
