ADDED : மே 04, 2026 10:56 PM

- நமது நிருபர் -:
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் விதுராஸ்வதா கிராமத்தில் அமைந்துள்ளது விதுராஸ்வதா கோவில்.
புராணங்களின்படி, ஒரு முறை எமதர்மராஜா மனிதாக பிறக்க சாபம் பெற்றார். இதையடுத்து, பூமியில் விதுரராக பிறந்தார். இவரே, மஹாபாரதத்தில் மன்னர் திருதராஷ்டிரன் சபையில் இடம் பெற்றிருந்தார். அதுமட்டுமின்றி, திருதராஷ்டிரரின் சகோதரருமாவார்.
குருஷேத்திர போர் முடிந்ததும், கிருஷ்ணனை சந்தித்த விதுரர், இதற்கு பரிகாரம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர், புனித யாத்திரை மேற்கொள்ளும்படி கூறினார்.
தற்போதைய கவுரிபிதனுாருக்கு வந்த விதுரர், அங்கு ஆற்றில் சந்தியாவதனம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சிறிய மரச்செடியை நட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த மகரிஷி மைத்ரேயர், இந்தச் செடியை வணங்கினால், இரட்சிப்பு கிடைக்கும் என்றார்.
அதன்படி, விதுரரும் இச்செடியை நினைத்து தியானம் செய்து வந்தார். இவரின் தியானத்தால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர் முன் தோன்றினர். அன்று முதல் இந்த இடம், 'விதுராஸ்வதா' என்று அழைக்கப்படுகிறது. அவர் நட்ட மரமே அஸ்வதா மரம். இம்மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் உள்ளதாக நம்பப்படுகிறது.
உத்தர பினாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த அஸ்வத மரம், புனிதமானதாகவும், மங்களகரமானதாகவும் திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், நாகதோஷம், நாகம் சார்ந்த பிற குறைபாடுகள் உள்ளவர்கள், இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், வேண்டுதல் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, கர்நாடகா மட்டுமின்றி, ஆந்திரா உட்பட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்குள் நுழைந்ததும் கருவறையை சுற்றியுள்ள பகுதி முழுதும் ஆயிரக்கணக்கான நாக தேவதைகள் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
கருவறைக்கு செல்லும் நுழைவு வாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் இடது புறம் மகரிஷி மைத்ரேயர், வலதுபுரத்தில் விதுரரர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. கோபுரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் சிறைகள் அமைந்து உள்ளன.
