ADDED : ஜூன் 24, 2026 11:35 PM
பெரம்பலுார்: பள்ளி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்களில் இடம்பெற்றுள்ள, த.வெ.க., கட்சியின் பெயர், சின்னம், கொடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உபகரணங்களான பாடநுால்கள் மற்றும் நோட்டு புத்தகங்களில், எந்தவொரு அரசியல் கட்சியின் சின்னம், கொடி மற்றும் தலைவர்களின் படங்களை அச்சிடக்கூடாது என, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அரியலுாரில் பிரபல புத்தகம், நோட்டு விற்பனை செய்யும் கடை ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நோட்டின் முகப்பு அட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், விசில் சின்னம், அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் தலைமை செயலகம் படம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
நோட்டின் விலை , 35 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த நோட்டில், அச்சிட்டு வெளியிட்ட அச்சகத்தின் பெயர் குறிப்பிடப் படவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், 'இது பள்ளி மாணவர்களின் மனதில், பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கும் செயல். வன்மையாக கண்டிக்கிறோம். கல்விக் கூடத்தில், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும்இத்தகைய செயல் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு, இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், ''இது குறித்து தகவல் வந்துள்ளது. இதை தடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
