ADDED : மார் 14, 2026 06:37 AM

- நமது நிருபர் -:
முள்ளங்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில், பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால், சிலருக்கு இதன் வாசம் பிடிப்பது இல்லை. கிராமப்புறங்களில் முள்ளங்கி சட்னி மிகவும் பேமஸ். இது, மிகவும் சுவையானது மட்டுமல்ல, செய்வதும் எளிது.
செய்முறை முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, வேர்க்கடலையை போட்டு. மிதமான தீயில் வறுக்கவும். அதன்பின் சீரகம், தனியா, எள் சேர்த்து வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும். அதே வாணலியில், எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய முள்ளங்கி, உப்பு சேர்த்து ஐந்தாறு நிமிடம் கிளறவும்.
இதில், நறுக்கிய தக்காளி, பூண்டு, புளி ரசம் சேர்த்து நன்றாக கிளறவும். வறுத்து வைத்துள்ள வேர்கடலை, சீரகம்,எள், தனியாவை மிக்சியில் போட்டு அரைக்கவும். அதன்பின் பூண்டு, புளியை போட்டு அரைக்கவும். இவற்றுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாயை போட்டு அரைக்கவும்.
கடைசியாக வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, கொத்துமல்லியை மிக்சியில் மற்ற பொருட்களுடன் சேர்த்து, நைசாக அரைத்து. பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் கடுகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
இதனை பாத்திரத்தில் வைத்துள்ள சட்னியில் சேர்த்து கிளறினால், சுவையான முள்ளங்கி சட்னி தயார்.
சோற்றில் பிசைந்து சாப்பிடலாம். கோதுமை சப்பாத்தி, சோள ரொட்டி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்றதாகும். ஒரு முறை சுவைத்தால், அடிக்கடி சாப்பிட துாண்டும்.

