ADDED : ஜூலை 02, 2025 07:18 AM
சிக்கபல்லாபூர் : நீண்ட நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை, கிராமத்தினரே பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபண்டேவின் கெரனஹள்ளி கிராமம், வர்லகொண்டா கிராமத்தில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது.
இதை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பாறை ஒன்றின் மீது சிறுத்தை படுத்திருப்பது, ட்ரோன் கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்தை, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை கெரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணப்பா, ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது உணவு தேடி வந்த சிறுத்தை, ராமகிருஷ்ணப்பாவை தாக்கியது. அவர் அலறியடித்து ஓடி தப்பினார்.
இத்தகவல் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கையில் உருட்டைக்கட்டை, வலைகளுடன் சிறுத்தை தென்பட்ட இடத்திற்கு சென்றனர். அவர்களை தாக்க வந்த சிறுத்தை மீது வலையை வீசிப் பிடித்தனர்.
பின், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்களிடம், சிறுத்தையை ஒப்படைத்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
