/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நெட்ஒர்க் பிரச்னையால் பதவி பறிபோனதா? கமிஷனர் சஸ்பெண்ட் பின்னணி காரணங்கள்
/
நெட்ஒர்க் பிரச்னையால் பதவி பறிபோனதா? கமிஷனர் சஸ்பெண்ட் பின்னணி காரணங்கள்
நெட்ஒர்க் பிரச்னையால் பதவி பறிபோனதா? கமிஷனர் சஸ்பெண்ட் பின்னணி காரணங்கள்
நெட்ஒர்க் பிரச்னையால் பதவி பறிபோனதா? கமிஷனர் சஸ்பெண்ட் பின்னணி காரணங்கள்
ADDED : ஜூன் 07, 2025 11:05 PM

பெங்களூரு: பெங்களூரு முன்னாள் கமிஷனர் தயானந்தா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதன் பின்னணி குறித்த காரணம் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானம் முன், கடந்த 4ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மறுநாள் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, கூடுதல் போலீஸ் கமிஷனர் விகாஸ்குமார், மத்திய மண்டல டி.சி.பி., சேகர் தெக்கண்ணவர், ஏ.சி.பி., பாலகிருஷ்ணா, கப்பன் பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரிஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
நேர்மையான அதிகாரி, மக்களால் எளிதில் அணுக கூடியவர் என்று பெயர் எடுத்த தயானந்தாவை சஸ்பெண்ட் செய்ததால், அரசு மீது மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், அரசின் முடிவை விமர்சித்துள்ளனர்.
பாராட்டு விழா
இந்நிலையில் தயானந்தா சஸ்பெண்ட் ஏன் என்பதற்கு காரணம் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 4ம் தேதி மாலை 3:30 மணிக்கு சின்னசாமி மைதானம் முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முதல் மரணம் 4:00 மணிக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் தான் விதான் சவுதாவில் ஆர்.சி.பி., வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மழை பெய்ததால் நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்ததால் சித்தராமையா ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, கூட்ட நெரிசல் சிக்கி இருவர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அவர் தன் காவிரி இல்லத்திற்கு சென்றுவிட்டார். இவ்வேளையில் அங்கு வந்த, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடன் ஆலோசனை நடத்தியபோது, 5 பேர் இறந்தது தெரிந்தது.
“நிகழ்ச்சி நடக்கும்போதே ஒருவர் இறந்தது பற்றி எனக்கு தெரிந்திருந்தால் நிகழ்ச்சியை நிறுத்தி இருப்பேன்,” என, பரமேஸ்வரிடம், சித்தராமையா கூறி இருக்கிறார்.
எரிச்சல்
கடந்த 5ம் தேதி மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி பேட்டி அளிக்கும்போது, “மக்கள் இறந்ததை பற்றி கவலைப்படாமல் தோசை, அல்வா சாப்பிட முதல்வர் சென்றார்,” என கூறியது முதல்வரின் கோபத்தை அதிகரித்துள்ளது.
தயானந்தாவை அழைத்து, 'என்னிடம் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை' என்று அவர் கேட்டுள்ளார். இதற்கு, “நெட்ஒர்க் செயலிழந்துவிட்டது. இதனால் உங்களுக்கு தகவல் தெரிவிக்க தாமதம் ஆனது,” என்று கூறி உள்ளார்.
இந்த பதிலால் எரிச்சல் அடைந்த சித்தராமையா, தயானந்தாவை சஸ்பெண்ட் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.