கிராமத்தினரை வெளியேற்ற மாட்டோம் பிரமோதா தேவி உடையார் திட்டவட்டம்
கிராமத்தினரை வெளியேற்ற மாட்டோம் பிரமோதா தேவி உடையார் திட்டவட்டம்
ADDED : ஏப் 15, 2025 06:56 AM

மைசூரு: ''சாம்ராஜ் நகரில் 4,500 ஏக்கர் நிலம் மைசூரு அரச குடும்பத்தினருக்கு சொந்தமானது. இதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அரண்மனை பெயருக்கு நிலம் வந்தாலும், கிராமத்தினர் பயப்பட தேவையில்லை. அவர்களை வெளியேற்ற மாட்டோம்,'' என மைசூரு அரச குடும்பத்தின் ராஜமாதா பிரமோதா தேவி உடையார் உறுதியாக தெரிவித்தார்.
சாம்ராஜ்நகர் தாலுகாவில், 4,500க்கும் மேற்பட்ட நிலம் மஹாராஜாவுக்கு சொந்தமானது. இந்த நிலத்தை தன் பெயருக்கு பட்டா செய்து தரும்படி, பிரமோதா தேவி உடையார், சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பிரமோதா தேவி உடையார் பெயருக்கு, பட்டா செய்து கொடுத்தால் ஊரே காலியாகும் என, சித்தய்யனபுரா கிராமத்தினர் கலக்கம் அடைந்தனர். தங்களை வெளியேற்ற கூடாது என, அரச குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து, பிரமோதா தேவி உடையார் நேற்று அளித்த பேட்டி:
நிலம் விஷயத்தில் கிராமத்தினர் கலக்கம் அடைய தேவையில்லை. 1950ன் ஆவணங்களின் படி, சாம்ராஜ்நகர் தாலுகாவின் பல்வேறு இடங்களில் உள்ள 4,500 ஏக்கர் நிலம், மஹாராஜாவின் தனிப்பட்ட சொத்தாகும். இதை என் பெயருக்கு பட்டா செய்து தரும்படி, மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதினேன்.
தாசில்தாருக்கும், மாநில அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஒருவேளை எங்களுக்கு பட்டா வந்தாலும், கிராமத்தினர் பீதியடைய தேவையில்லை. அன்றைய மஹாராஜா, நிலத்தை தானம் செய்திருந்தால் அதை பறிக்க மாட்டோம். மக்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டோம். அவர்கள் அங்கேயே வசிக்கலாம். எந்த காரணத்தை கொண்டும், மக்களை வெளியேற்ற மாட்டோம்.
கிராமத்தினரிடம் உள்ள ஆவணங்கள் குறித்து, எங்களுக்கு தெரியாது. மஹாராஜா வழங்கிய தான பத்திரங்களுடன், மக்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அரண்மனை அலுவலகத்துக்கு வரலாம். அந்த இடத்தை அவர்களுக்கே விட்டு தர, ஏற்பாடு செய்வோம்.
பண்டிப்பூர் வனப்பகுதியில், இரவு நேரத்தில் வாகனங்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்க வேண்டும். பண்டிப்பூர் தேசிய பூங்காவின், புலிகள் சரணாலயத்தில் வன விலங்குகள் அதிகம் வசிக்கின்றன. வாகன போக்குவரத்தால், இவைகளுக்கு தொந்தரவு ஏற்படும். ஏற்கனவே இரவு 9:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு அனுமதி உள்ளது. அதன்பின் யாரும் நடமாடுவது இல்லை; தடையை நீக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
