ADDED : ஏப் 15, 2026 03:26 AM

தாவணகெரே காங்கிரசில் ஏற்பட்ட அரசியல் பரபரப்பு இன்னும் ஓயாத நேரத்தில், பா.ஜ.,வுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வெடித்து உள்ளன.
தாவணகெரே மாவட்ட அரசியலில் குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தாவணகெரே தெற்கு தொகுதி வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜ., இடையே பெரும் குழப்பம் நிலவியது.
ஒருபுறம் முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர், முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா அணிகள் இடையேயான இழுபறிக்கு மத்தியில், கட்சி மேலிடம் மூன்றாவது நபருக்கு வாய்ப்பு அளித்தது. தற்போது இடைத்தேர்தல்கள் முடிந்து, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில், தாவணகெரே மாவட்ட பா.ஜ.,வுக்குள் வேட்பாளர் தேர்வு போட்டி மீண்டும் துவங்கி உள்ளது. தாவணகெரேயில் சுவாபிமானி பாலகா மற்றும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தின் தலைவர் வினய் குமார், தாவணகெரே லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். கிடைக்காததால், சுயேச்சையாக களம் இறங்கினார்.
அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட முயற்சித்து வருகிறார். தாவணகெரே வடக்கு, ஹொன்னாளி ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குமாறு கேட்டு வருகிறார்.
இது தொடர்பாக வினய்குமார் கூறுகையில், ''தாவணகெரே தெற்கு தொகுதியில் போட்டியிட கிடைக்க வேண்டிய 'சீட்' கடைசி நிமிடத்தில் கை நழுவியது. அடுத்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வில் எனக்கு சீட் கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும், தாவணகெரே வடக்கு அல்லது ஹொன்னாளியில் இருந்து போட்டியிடுவேன்,'' என தெரிவித்திருந்தார்.
ரேணுகா கோபம்
தன் தொகுதி மீது வினய் குமார் கண் வைத்திருப்பது, ரேணுகாச்சார்யாவை கோபமடைய வைத்து உள்ளது. ஹொன்னாளியில் ஐந்து முறை போட்டியிட்டு, மூன்று முறை வெற்றி பெற்றவர் இவர். 'அடுத்த சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிடுவேன்' என்றார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், ஹொன்னாளியில் ரேணுகாச்சார்யா போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.
ஐந்து முறை
இத்தொகுதியில் போட்டியிட்ட ரேணுகாச்சார்யாவுக்கு எதிராக, முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட சித்தேஸ்வர் மனைவி காயத்ரி சித்தேஸ்வர், 26 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு எடியூரப்பாவின் ஆதரவாளரான ரேணுகாச்சார்யா தான் காரணம் என்று சித்தேஸ்வர் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.
அன்று முதல் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திராவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகிறார். எடியூரப்பாவுக்கு எதிராக செயல்படுவதற்கு என்றே, கட்சிக்குள் தனக்கென ஒரு அணியை அமைத்து செயல்பட்டு வருகிறார்.
அதுபோன்று ரேணுகாச்சார்யாவும் தனக்கென ஒரு அணியை உருவாக்கி, கட்சிக்குள் தனக்கு எதிராக செயல்படுவோருக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார்.
கதவுகள் மூடல் இது குறித்து ரேணுகாச்சார்யா கூறியதாவது:
ஹொன்னாளியில் சீட் கேட்போரில், என்னை தவிர, மற்றவர்களுக்கு கதவுகள் மூடப்பட்டு உள்ளன. இத்தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் நான் தான். எனக்கு எதிராக சிலர் சதி செய்கின்றனர். இதுபோன்று நானும் செய்ய நினைத்தால், தாங்கமாட்டார்கள். இத்தொகுதியில் பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை எனக்கு தெரியும்.
யார் என்ன சொன்னாலும், யார் வந்தாலும், இத்தொகுதியின் வேட்பாளர் நான் தான்.
கட்சி மேலிடமும் எனக்கு சாதகமாக தான் உள்ளது. வினய்குமாரின் பேச்சுக்கு பின்னால் யார் உள்ளனர் என்பது எனக்கு தெரியும். நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படுத்துவேன்.
தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில் சீனிவாசை, கட்சி மேலிடம் அறிவித்தது. எனவே, தான் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:
