சித்தராமையா முதுகில் குத்தியது யார்? பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆவேசம்!
சித்தராமையா முதுகில் குத்தியது யார்? பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆவேசம்!
ADDED : ஜூன் 01, 2026 12:15 AM

விஜயபுரா: ''சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்கியது, அவருக்கு செய்த அவமதிப்பாகும். அவருடன் இருந்தவர்களே அவரது முதுகில் குத்தினர்,'' என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பதவியில் இருந்து, சித்தராமையாவை கீழே இறக்கியது பலருக்கும் வருத்தம் அளித்துள்ளது. சங்கொல்லி ராயண்ணாவுக்கு நடந்ததை போலவே, இவருக்கும் நடந்துள்ளது.
அவருடன் இருந்தவர்களே, அவரது முதுகில் குத்தியுள்ளனர். துரோகம் செய்தவரின் பெயர், வெளியே வந்துள்ளது. அந்த நபர் அடுத்த பிற்படுத்தப்பட்ட தலித் தலைவர் என, நம்பப்பட்டது.
அனைத்து கட்சிகளிலும், இதே கதைதான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அனைவரும் அமைச்சர்களாக வேண்டும் என்பர். பணத்துக்கு அமைச்சர் பதவியை விற்கக்கூடாது. அடுத்த முதல்வர் சித்தராமையாவை போன்றவர் இல்லை; அவர் பணத்துக்காக பதவிகளை விற்கக்கூடும்.
நான் லிங்காயத் தலைவராக, சித்தராமையாவை பற்றி எப்போதும் கீழ்த்தரமாக பேசியது இல்லை. மிக அதிகமான முறை பட்ஜெட் தாக்கல் செய்த, அனுபவம் மிக்க அரசியல்வாதி அவர்.
தனிப்பட்ட முறையில், யார் மீதும் பகைமை காட்டியது இல்லை. எதிரிகள் சம்பந்தப்பட்ட பழைய கோப்புகளை, துாசி தட்டி எடுத்து, அரசியல் செய்தவர் அல்ல. இது அவரது சிறந்த குணம்.
இனி, கர்நாடகாவில், இத்தகைய நல்ல அரசியல் நடக்காது. மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், வரும் நாட்களில் பேசுவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிவகுமார் முதல்வராவதில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மிகவும் மகிழ்ச்சி அடைவார். இவர்கள் இருவரும், நெருக்கமான 'பிசினஸ்' பார்ட்னர்கள்.
சித்தராமையா ராஜினாமா செய்ததும், விஜயபுராவில் சில முஸ்லிம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி யதை, நான் கண்டிக்கிறேன். எங்களுக்கு எங்களின் தர்மம், கலாசாரம் மற்றும் மக்களே முக்கியம்.
விஜயபுராவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். கார்த்திக் ரெட்டி எஸ்.பி.,யாக இருந்த போது, ரவுடிகளை முற்றிலுமாக ஒடுக்கினார். இப்போது மாவட்டத்தில், ரவுடிகளுக்கு சட்டத்தை பற்றிய பயமே இல்லை. மாவட்ட எஸ்.பி., எந்த அரசியல் நெருக்கடிகளுக்கும் பணிய கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
