/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எத்னால் தனிக்கட்சி துவங்கினால் பாதிப்பு யாருக்கு?
/
எத்னால் தனிக்கட்சி துவங்கினால் பாதிப்பு யாருக்கு?
எத்னால் தனிக்கட்சி துவங்கினால் பாதிப்பு யாருக்கு?
எத்னால் தனிக்கட்சி துவங்கினால் பாதிப்பு யாருக்கு?
ADDED : மார் 11, 2026 05:25 AM

பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவையும், அவரது தந்தை எடியூரப்பாவையும் எதிர்த்ததால், விஜயபுரா நகர எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். தற்போது, எந்த கட்சிக்கும் ஆதரவு தராமல் செயல்பட்டு வருகிறார். இவர் எப்படியாவது பா.ஜ.,வில் இணைய வேண்டும் என முயற்சித்தார். இவரது முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. எனவே, தனிக்கட்சி துவங்குவேன் எனவும், 2028ல் நானே முதல்வர் எனவும் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ஒரு வேளை எத்னால் தனிக்கட்சி துவங்கினால், பாதிப்பு யாருக்கு என்பதை பார்ப்போம்.
லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவர் எத்னால். இந்த சமூகத்தை சேர்ந்தவர்களே வட கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களின் ஆதரவின்றி எந்த ஒரு கட்சியும் வட கர்நாடகாவில் வெற்றி பெறுவது கடினம்.
அப்படி இருக்கையில், பஞ்சமசாலி சமூகத்தின் முழு ஆதரவை பெற்ற தலைவராக எத்னால் இருக்கிறார். இதற்காக, இவர் பல போராட்டங்களை முன்நின்று நடத்தி உள்ளார். அதாவது, பஞ்சமசாலி சமூகத்துக்கு ஓ.பி.சி., பிரிவில் 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தினார். இதன் மூலம், பஞ்சமசாலி சமூகத்தினரின் இதயத்தில் இடம் பிடித்தார். இதே கோரிக்கைக்காக தற்போதும் குரல் கொடுத்து வருகிறார். மேலும், கூடலசங்கமா பஞ்சமசாலி மடத்தின் பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியின் ஆதரவும் எத்னாலுக்கு இருக்கிறது. இது இவருக்கு மேலும் பலத்தை சேர்க்கிறது.
வட கர்நாடகாவில் எத்னாலுக்கு செல்வாக்கு அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் புதிய கட்சியை துவங்கினால் விஜயபுரா, பாகல்கோட் ஆகிய வட மாவட்டங்களில் நிச்சயம் ஓட்டு பிரியும். இது, பா.ஜ.,வின் ஓட்டு வங்கியை கணிசமாக பாதிக்கும். சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு தலைவலியை உண்டாக்கும்.
அதே சமயம், பா.ஜ.,வின் ஓட்டுகள் பிரிவது, ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு சாதகமாக அமையும். இதனால், வட கர்நாடகாவின் பல தொகுதிகளில் காங்கிரஸ் சுலபமாக வெல்லக்கூடும் நிலை உருவாகும். சட்டசபை தேர்தலில் ஒரு வேளை எத்னாலோ, அவர் ஆதரவாளர்களோ சில தொகுதிகளில் வெற்றி பெற்றால், 'கிங் மேக்கராக'வும் அவர் உருவெடுக்கலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், எத்னால் தனிக்கட்சி துவங்கினால் பா.ஜ.,வுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்; அதே சம யம் காங்கிரசுக்கு மறைமுக பலத்தை கொடுக்கும்.
- நமது நிருபர் -:

